அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 80 இலட்சத்தைக் கடந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாட்டில் சுமார் 10 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தொற்று நோயின் ஆரம்பத்தில் இருந்து அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 217,000 -க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்கா முழுவதும் நேற்று வியாழக்கிழமை 56 ஆயிரம் புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். புதன்கிழமை இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது.
குளிர் காலம் ஆரம்பித்துள்ள நிலையில் தொற்று நோய் மேலும் வேகமாகப் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் வட-கிழக்கு மாகாணங்களில் முந்தைய நான்கு வாரங்களை விட கடந்த நான்கு வாரங்களில் அதிகளவு தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
விஸ்கான்சின், தெற்கு டகோட்டா மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் போன்ற மாகாணங்களில் புதிய தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலங்களில் இரட்டிப்பாகியுள்ளது.
டெக்சாஸ், புளோரிடா, நியூயோர்க், ஜோர்ஜியா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் அதிக எண்ணிக்கையான தொற்று நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
அமெரிக்கா முழுவதும் இதுவரை பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகையில் 40 வீதத்தினர் இந்த 5 மாகாணங்களையும் சேர்ந்தவா்களாவர்.
அதிகரித்து வரும் தொற்று நோயாளர்களைச் சமாளிக்க முடியாமல் பல மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகள் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா