கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பான ஆய்வுத் தகவல்களைத் திருடவோ அல்லது அவற்றைச் சீரழிக்கவோ சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு வருவதாக பிரிட்டன் உளவு நிறுவனமான எம்.ஐ.-5 (MI-5) எச்சரித்துள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற உளவு நிறுவனமான எம்.ஐ.-5 சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராகச் செயற்பட்டு பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தடுப்பு மருந்துகள் தொடர்பான தகவல்களைத் திருட பயங்கரவாத அமைப்புகள் சில திட்டமிட்டு வருவதாக எம்.ஐ.-5 உளவு அமைப்பின் தலைமை அதிகாரி கென் மெக்கல்லம் எச்சரித்துள்ளார்.
ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வலதுசாரி பயங்கரவாதிகள் உள்ளிட்ட சில பயங்கரவாதிகள் பிரிட்டனின் தடுப்பு மருந்துகள் குறித்த தகவல்களைத் திருட முயற்சி மேற்கொண்டு வருவதாக மெக்கலம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தடுத்து தடுப்பு மருத்து தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி தற்போதுவரை உலக நாடுகள் பலவற்றில் 150-க்கும் அதிகமான தடுப்பு மருந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இதில் 42 தடுப்பு மருந்துகள் மனிதப் பரிசோதனைக் கட்டத்தை எட்டியுள்ளன. ஏனைய தடுப்பு மருந்துகள் விலங்குகளுக்குக் கொடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் எந்தெவொரு தடுப்பு மருந்தும் இதுவரை பாவனைக்கு வரவில்லை.
கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த விட்டதாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளபோதும் அது இன்னமும் பாவனைக்கு வரவில்லை. இந்த மருந்தின் பாதுகாப்புக் குறித்துச் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் தடுப்பூசியும் நவம்பா்-03 ஜனாதிபதித் தோ்தலுக்கு முன் பாவனைக்கு வரும் என ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்தபோதும் அதற்கான சாத்தியங்களும் இல்லாத நிலையே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்