ஐபிஎல்-2020 ரீ-20 தொடரின் லீக் ஆட்டத்தில் குயின்டன் டீ கொக்கின் அதிரடி ஆட்டத்தின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் தொடரில் தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியை பதிவு செய்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஐபிஎல் கிரிக்கெடின் 32-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 148 ஓட்டங்களை எடுத்தது. பேட் கம்மின்ஸ் 53 ஓட்டங்களும், மோர்கன் 39 ஓட்டங்களும் அடித்தனர்.
பின்னர் 149 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி கொக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
தொடக்கம் முதலே டி கொக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஓட்ட வீதம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடி 10.3 ஓவரில் 94 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. ரோகித் சர்மா 36 பந்தில் 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுபக்கம் தனது அதிரடியைத் தொடர்ந்த டி கொக் 25 பந்தில் அரைசதம் கடந்தார். 3-வது விக்கெட்டுக்கு டி கொக் உடன் சேர்ந்து ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மும்பை இந்தியன்ஸ் 16.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி கொக் 44 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ஓட்டங்களும், ஹர்திக் பாண்ட்யா 11 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 21 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகன் விருதை குயின்டன் டீ கொக் பெற்றுக் கொண்டார்.
ஐபிஎல்-2020 ரீ-20 தொடரின் தொடக்க இரு ஆட்டங்களிலும் தோல்வியைச் சந்தித்து அதிர்ச்சியளித்த மும்பை அணி அதன் பின்னர் விளையாடிய ஆறு போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா