ஹொங்கொங் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்களுக்கு கனடாவில் அரசியல் தஞ்சம் வழங்க வேண்டாம் என சீனா விடுத்த எச்சரிக்கையை கனடா நிராகரித்துள்ளது.
ஹொங்கொங் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்களை வன்முறைக் குற்றவாளிகள் என்று முத்திரை குத்தியுள்ள சீனா, அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு ஒப்பானது என எச்சரித்திருந்தது.
ஹொங்கொங்கின் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு குறித்து கனேடிய தரப்பு உண்மையில்அக்கறை கொண்டிருந்தால் இந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என கனடாவுக்கான சீனத் தூதர் கொங் பீவு வியாழக்கிழமை கருத்து வெளியிட்டார்.
அத்துடன், ஹொங்கொங்கில் உள்ள 300,000 கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து உண்மையிலேயே அக்கறை கொண்டால் வன்முறையாளர்களுக்கு எதிராகப் போராடும் சீனாவின் முயற்சியை ஆதரிக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு நேற்று வெள்ளிக்கிழமை பதிலளித்துள்ள கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, சீனாவின் வற்புறுத்தும் இராஜதந்திரத்தை ஏற்க முடியாது என்றார்.
ஹொங்கொங் மற்றும் சின்ஜியாங்கில் சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்து முன்நிற்பேன் என்றும் அவர் கூறினார்.
உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளுக்காக நாங்கள் எங்கள் குரலை உயர்த்துவோம் என ஒட்டாவாவில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ட்ரூடோ கூறினார்.
எனினும் சீனாவுடன் மோதல் போக்கில் ஈடுபடவோ, பதட்டங்களை அதிகரிக்கவோ எதிர்பார்க்கவில்லை என்று ட்ரூடோ குறிப்பிட்டார்.
இதேவேளை, ஹொங்கொங்கியர்கள் குறித்து சீனா வெளியிட்ட அறிக்கை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் கவலைக்குரியது என கனேடிய வெளியுறவு அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் கூறினார்.
கனடா எப்போதும் மனித உரிமைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கனேடியர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் என்பதை கனடாவுக்கான சீனத் தூதரை அழைத்துத் தெளிவுபடுத்துமாறு கனேடிய சர்வதேச விவகார பிரிவை அறிவுறுத்தியுள்ளதாக அறிக்கையொன்றில் ஷாம்பெயின் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்த வார தொடக்கத்தில் ஹொங்கொங்கில் சீனாவின் நடவடிக்கைகள் மற்றும் சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள உய்குர் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் குறித்து சீனாவை கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கடுமையாக விமர்சித்தார். வற்புறுத்தும் இராஜதந்திரத்தை சீனா கைவிட வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் வியாழக்கிழமை பத்திரிகையாளர் களைச் சந்தித்த கனடாவுக்கான சீனத் தூதுவர் கொங் பீவு, பிரதமர் ட்ரூடோ வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
சீன தரப்பில் எந்தவொரு கட்டாய இராஜதந்திரமும் இல்லை என்று அவா் கூறினார், ஹொங்கொங் மற்றும் சின்ஜியாங் தொடர்பான பிரச்சினை சீனாவின் உள் விவகாரம். வெளிநாடுகள் இதில் தலையிடக் கூடாது எனவும் அவா் குறிப்பிட்டார்.
ஹொங்கொங் ஜனநாயக சார்பு சீன எதிர்ப்பாளர்களுக்கு கனடா அடைக்கலம் வழங்குவது சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு ஒப்பானது எனவும் சீனா எச்சரித்திருந்தது.
எனினும் சீனாவின் இந்த எச்சரிக்கையை கனடா முற்றுமுழுதாக நிராகரித்துள்ளது.
சீனாவின் எச்சரிக்கையை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் ஆகியோர் முற்றுமுழுதாக நிராகரித்துள்ளனர்.