பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகரில் தீவிரவாதி எனக் கருதப்படும் ஒருவரால் ஆசிரியர் ஒருவர் கத்தியால் தலையில் தாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படுகொலையை அடுத்து தீவிரவாதி எனச் சந்தேகிக்கப்படும் கொலையாளி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிரான்ஸ் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இடம்பெற்ற இக்கொடூர சம்பவத்தில் 47 வயதான வரலாறு-புவியியல் ஆசிரியர் ஒருவரே படுகொலை செய்யப்பட்டார்.
கொலையாளி மொஸ்கோவில் பிறந்த 18 வயதான இளைஞன் எனவும் தாக்குதல் நடத்திய புகைப்படங்களை அவர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஒரு சம்பவம் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆசிரியரைக் கொன்ற கொலையாளி, அவரது சடலத்துடன் நின்றவாறு கத்தியைக் காட்டி அயலில் நின்றிருந்த ஏனையோரையும் அச்சுறுத்தியுள்ளார்.
உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்த மாநகரப் பொலிஸார் ஆயுதங்களைக் கைவிடுமாறு அவரிடம் கோரினர். ஆனால் அதை ஏற்க மறுத்த தாக்குதலாளி அச்சுறுத்தியவாறு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் அவரை அருகே உள்ள ஓரிடத்தில் வைத்து விசேட படையினர் சுட்டுக் கொன்றனர் என்று கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட பேராசிரியர் அண்மையில் இடம்பெற்ற பாடவேளை ஒன்றின்போது தனது வகுப்பு மாணவர்களுக்கு முகமது நபி தொடர்பான சர்ச்சைக்குரிய சில கேலிச் சித்திரங்களைக் காண்பித்து விளக்கமளித்துள்ளதாகவும் இது தொடர்பாக சில பெற்றோர்கள் தரப்பில் இருந்து முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிரியரது படுகொலைக்கும் இதற்கும் தொடர்பு இருக்கின்றதா? என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, இந்தப் படுகொலைச் சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இந்தப் படுகொலைச் சம்பவம் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான பிரான்சின் போரை மேலும் தீவிரமாகத் தொடர வேண்டிய தேவையை உணர்த்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.