ஆஸ்திரிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று லக்சம்பேர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய சக பிரதிநிதிகளுடனான கூட்டத்தின்போது அவர் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என ஆஸ்திரிய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.
அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் கொரோனா அறிகுறிகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. எனினும் வழமையான பரிசோதனையின்போது அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது எனவும் அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.
புதன்கிழமை நடைபெற்ற ஆஸ்திரிய அமைச்சரவைக் கூட்டத்திலும் ஷாலன்பெர்க் கலந்து கொண்டார். ஆனால் அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் இதன்போது முககவசம் அணிந்தனர் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆஸ்திரிய ஜனாதிபதி செபாஸ்டியன் குர்ஸின் நெருங்கிய சக ஊழியர் ஒருவா் கடந்த இரு வாரங்களுக்கு முன் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டார். இதனால் அச்ச நிலை ஒன்று ஏற்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இன்று சனிக்கிழமையன்று கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்