வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்திற்கு உட்பட்ட கிறிஸ்தவகுளம் கிராமத்தில் காணி துப்பரவாக்கும் பணிக்காக சென்றிருந்த இளைஞர்கள் மீது நேற்று (16.10) இரவு 10.00 மணியளவில் குழுவொன்று கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.
செட்டிகுளம் பகுதியில் அனுமதிபெற்று காணியொன்றினை துப்பரவாக்கிய பின்னர் ஓய்வெடுத்து கொண்டிருந்த 05 இளைஞர்கள் மீது அப்பகுதியை சேர்ந்த குழுவொன்று உள்ளுர் கத்தி, வாள், கோடரி மற்றும் இருப்பு கம்பிகள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்கியதோடு உள்ளுர் துப்பாக்கியை காட்டி அச்சறுத்தியுமுள்ளனர்.
படுகாயமடைந்த இளைஞர்களிடம் இருந்து பணம்இ நகை போன்ற உடமைகளையும் திருடிய அக்குழுவினர் இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
எனினும் எவரும் அவர்களை காப்பாற்றுவதற்கு வராத நிலையில் காயமடைந்த இளைஞனொருவனிடம் இருந்த தொலைபேசியில் வவுனியாவில் உள்ள நண்பர்களுடன் தொடர்புகொண்டு அவர்களை வரவழைத்ததன் பின்னர் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
அங்கிருந்து இன்று காலை வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக காயமடைந்த இளைஞர்கள் மாற்றப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் சிகிச்சை பெற்று சென்றுள்ளதுடன் ஒருவருக்கு சத்திரசிகிச்சை இடம்பெறவுள்ளதுடன் மற்றையவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா மற்றும் செட்டிகுளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா