நியூசிலாந்து பொதுத் தோ்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆட்சியமைக்கவுள்ளார்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும்பாலும் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி 49 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
இன்று சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் எதிர்க்கட்சியான மைய - வலதுசாரி கொள்கை கொண்ட தேசிய கட்சி 27 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
உள்ளூர் நேரப்படி, இன்று காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு ஏழு மணியளவில் முடிவுற்ற நிலையில், உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி 49% வாக்குகளையும், தேசிய கட்சி 27% வாக்குகளையும், ஏ.சி.டி. மற்றும் பசுமைக் கட்சிகள் ஆகியவை தலா 8% வாக்குகளையும் பெற்றுள்ளன.
நியூசிலாந்து மக்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழிலாளர் கட்சிக்கு தங்களது மிகப்பெரிய ஆதரவை அளித்துள்ளதாக தோ்தல் வெற்றி குறித்துக் கருத்து வெளியிட்ட பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.
48.9 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க தேவையான 64 இடங்களை ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து