மினுவாங்கொட கொத்தணி பரவல் 3வது கொரோனா அலையாக உருவெடுத்துள்ள நிலையில் கொரோனாவின் பிடிக்குள் இலங்கை நாளுக்கு நாள் சிக்கிக் கொண்டு வருகையில் 2067 பேர் தொற்று உறுதியான நிலையில் உள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மினுவாங்கொட கொத்தணியில் நேற்றைய தினம் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மினுவாங்கொட கொத்தணியுடன் தொடர்புபட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களில் மேலும் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அவர்களுடன் தொடர்புடையதாக இனம் காணப்பட்டவர்களில் மேலும் 91 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மினுவாங்கொட கொத்தணியில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 2014 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப் பட்டிருபோரில் மேலும் 6 பேருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நேற்யை தினம் (ஒக்-17) 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்றைய தினம் மேலும் 10 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 395 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் தற்போதைய நிலையில் 2 ஆயிரத்து 67 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை