ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகள் மற்றொரு புதிய மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. சனிக்கிழமை நள்ளிரவு முதல் இந்தப் போர் நிறுத்தம் அமுலுக்கு வருகிறது.
இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சுக்களும் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டு சனிக்கிழமை மாலை அறிக்கை வெளியிட்டுள்ளன.
நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் 10 நாட்கள் இடைவெளியில் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்ட இரண்டாவது போர்நிறுத்தம் இதுவாகும்.
ஒக்டோபர் 09-ஆம் திகதி மொஸ்கோவில் இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
எனினும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரு நாடுகளும் பரஸ்பரம் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இரண்டாவது முறையாக மற்றொரு போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்துக்கு உரிமை கோரி ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளிடையே 1988 ஆம் ஆண்டு முதல் மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. 1994 ஆம் ஆண்டு இந்தப் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையே யுத்த நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
அதன் பின்னரும் சிறிய அளவில் மோதல்கள் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் முதல் பெரும் போர் வெடித்தது குறிப்பிடத்தக்கது.