இந்திய எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தமிழ்நாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கையில்,
கச்சத்தீவு அருகே பலூன் விரைவு (அதி நவீன ரோந்து) படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தனர்.
கடந்த 2ந்தேதி முதல் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் வானிலை மைய எச்சரிக்கை, உள்ளிட்ட காரணங்களால் 15 நாட்களாக மீன்பிடிச் செயற்பாட்டி;ல ஈடுபட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் காற்றின் வேகம் குறைந்ததையடுத்த நேற்று மீன் வளத்துறையிடம் மீன் பிடி அனுமதி டோக்கன் பெற்று இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.
மீனவர்கள் நேற்று நள்ளிரவு கச்சத்தீவுக்கும் - தனூஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஐந்திற்கும் மேற்பட்ட பலூன் விரைவு (அதி நவீன ரோந்து) படகுகளில் துப்பாக்கிகளுடன் வந்த இலங்கை கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள், கைது நடவடிக்கைக்கு அச்சப்பட்டு படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை கடலில் வீசி விட்டு கரை திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் படகு ஒன்றுக்கு 40ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவத்துள்ளனர்.
இந்திய இழுவைப்படகுகளால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.