பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகசெங்கோ இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெலாரஸிய தலைநகர் மின்ஸ்கின் தெருக்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுமார் 30 ஆயிரம் போ் திரண்டு எதிர்ப்பு ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரா்களுக்கு எதிராக துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்த பாதுகாப்புத் தரப்பினருக்கு அரசு அனுமதி வழங்கி அச்சுறுத்தியுள்ளபோதும் அதனைக் கண்டுகொள்ளாது போராட்டம் இடம்பெற்றது.
முன்னாள் சோவியத் குடியரசான ரஷ்யாவுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டுவரும் பெலாரஸ் அரசு தற்போது இடம்பெற்றுவரும் தொடர் மக்கள் போராட்டங்களால் கதிகலங்கியுள்ளது.
1994 முதல் சர்வாதிகார பாணியில் ஆட்சி செய்துவரும் லுகசெங்கோ ஆகஸ்ட் - 9 அன்று நடைபெற்ற தோ்தலில் 80% வாக்குகளுடன் மீண்டும் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்ததிலிருந்து போராட்டங்கள் தீவிரமைடைந்துள்ளன.
முறைகேடு செய்தே லுகசெங்கோ இந்த வெற்றியைப் பெற்றதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் சுமார் 30,000 போ் வரை பங்கேற்றதாக இன்டர்பொக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆா்ப்பாட்டக்காரர்களில் சுமார் 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், நகரின் சில பகுதிகளில் இணைய வலையமைப்புக்கள் சீர்குலைந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.