கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை 2 இலட்சத்தை நெருங்கி வரும் அதேவேளை, கொரோனா மரணங்களும் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை 1,827 புதிய தொற்று நோயாளர்கள் கனடாவில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 198,151 ஆக உயர்ந்துள்ளது.
கியூபெக் மற்றும் ஒன்ராறியோ மாகாணங்களே தொற்று நோயால் மிகக் கடுமையான பாதிப்புக்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன.
கியூபெக்கில் தினசரி தொற்று நோயாளர் எண்ணிக்கை நேற்று வரையான கடந்த மூன்று நாட்களாக ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை 1,094 புதிய தொற்று நோயாளர்கள் கியூபெக்கில் உறுதி செய்யப்பட்டனர்.
கியூபெக்குக்கு அடுத்ததாக ஒன்ராறியோ மாகாணத்தில் அதிகளவான தொற்று நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாகாணத்தில் 658 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
புதிய தொற்று நோயாளர்களுடன் ஒன்ராறியோவில் இதுவரை 64,371 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 55,371 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் ஒன்ராறியோவில் கொரோனா மரணங்களும் 3,046 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ரொரண்டோ, பீல் பிராந்தியம், யோர்க் பிராந்தியம் மற்றும் ஒட்டாவாவில் இரண்டாம் நிலைக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அடுத்த 28 நாட்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா