இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிய சாதனை உயர் மட்ட அதிகரிப்பைப் பதிவு செய்துள்ள நிலையில் அங்கு மேலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களை இரவு 9 மணிக்குப் பின்னர் கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் நகர மேயா்களுக்கு அளிக்கப்படுவதாக இத்தாலியப் கியூசெப் கோன்டே அறிவித்துள்ளார்.
இத்தாலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிய உயர் மட்ட அதிகரிப்பாக 11,705 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்தே கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் நகர மேயர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த மார்ச் மாதத்தில் தொற்று நோயின் முதல் அலையின்போது அறிவிக்கப்பட்டதைப் போன்ற தேசிய அளவிலான பொது முடக்கத்தை தவிர்ப்பதில் தமது அரசாங்கம் உறுதியாக உள்ளது என பிரதமர் கியூசெப் கோன்டே தெரிவித்தார்.
நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. தொற்று நோயைக் கட்டுப்படுத்த அனைவரும் தங்களது பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கோரிக்கை விடுத்தார்.
இரவு 9 மணி முதல் சூதாட்ட விடுதிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் நீச்சல் தடாகங்களை மூடுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் எனவும் பிரதமர் கியூசெப் கோன்டே தெரிவித்தார்.
இத்தாலியில் கடந்த பெப்ரவரியில் தொற்று நோய் பரவல் ஆரம்பத்தில் இருந்து இதுவரை 36,543 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனுக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் கோவிட் -19 தொற்று நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக இத்தாலி உள்ளது.
தொற்று நோயின் முதல் அலையின்போது இத்தாலியில் இரண்டு மாதங்கள் முழுமையாக தேசிய முடக்கல் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அங்கு தொற்று நோய் கட்டுப்பாட்டக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது அலை தீவிரமாகிவரும் நிலையில் முழுமையான சமூக முடக்கல்களை அறிவிக்கத் தயங்கும் இத்தாலி அரசு, சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் 69 கொரோனா மரணங்கள் பதிவாகின. சனிக்கிழமை 467 போ் உயிரிழந்தனர். எனினும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இத்தாலியில் தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது ஏற்பட்ட தினசரி இறப்புக்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தற்போது மரண வீதம் குறைந்துள்ளது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தொற்று நோயின் முதல் அலை உச்சத்தில் இருந்தபோது தினசரி 900 வரையில் உயிரிழப்புக்கள் பதிவானமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்