முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் தெகிவளையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் தம்பதிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரிஷாட் பதியுதீன் நெருங்கிய கூட்டாளியான மருத்துவர் ஒருவர் மற்றும் அவரது மனைவி ஆகியோரே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தெகிவளைக்கு வருவதற்கு முன்னர் ரிஷாட் பதியுதீன் தஞ்சமடைந்த மற்றும் தஞ்சம் கோரிய ஏனைய இடங்கள் குறித்த விவரங்களைப் பெறும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல் சட்ட விதிகளை மீறி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தோரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளைப் பயன்படுத்தி புத்தளத்துக்கு அழைத்து சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.
அதனடிப்படையில் அவரை கைது செய்யவதற்காக 6 பொலிஸ் குழுக்கள் கடந்த ஒரு வாரமாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.
எனினும் தலைமறைவாகிருந்த ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று காலை தெகிவளையில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.