கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த போது இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று இதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, இடம்பெயர்ந்த வாக்காளர்களை அரச பேருந்துகளில் ஏற்றிச் சென்றதன் மூலம், பொதுச் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை முதலான குற்றச்சாட்டுக்கள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட 3 பேர் மீது முன்வைக்கப்பட்டது.இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் ஆறு நாட்களின் பின்னர் இன்று தெஹிவளை பகுதியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.