பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி இருவரும் கூட்டாக வலியுறுத்தியுள்ளதாக பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாரிஸில் இரு தலைவா்களுக்கு இடையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் ஈராக்கின் இறையாண்மையப் பாதுகாக்க பிரான்ஸ் தொடர்ந்து உதவும் என மக்ரோன் தெரிவித்தார்.
ஈராக் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கள் உள்ளன. அத்துடன், ஈராக்கின் உள்விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளும் ஈராக்கிற்கு பாரிய சவாலாக உள்ளதாக மக்ரோன் சுட்டிக்காட்டினார் எனவும் பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.