ஐபிஎல்2020 ரீ-20 தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் அடித்த சாதனைச் சதத்தினை வீணாக்கும் வகையில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் டுபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கப்பிட்டல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் நிலையில் எவ்வித அழுத்தங்களும் இன்றி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஷிகர் தவான் சதமடித்து பலம் சேர்த்திருந்தார்.
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த ஷிகர் தவான், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும் சதம் அடித்து அசத்தினார்.
இதன்மூலம் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார்.
அதேபோல், ஒரு ஐ.பி.எல். தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதம் அடிக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையும் ஷிகர் தவான் பெற்றுள்ளார். ஒரு ஐ.பி.எல். தொடரில் 4 சதங்களை விராட் கோலி விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷகர் தவானின் சாதனைச் சதத்தின் உதவியுடன் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களை அடித்தது. தவான் 61 பந்துகளை எதிர்கொண்டு பன்னிரண்டு 4 ஓட்டங்கள், மூன்று 6 ஓட்டங்கள் அடங்கலாக 106 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் இறங்கினர்.
ராகுல் 15 ஓட்டங்களிலும், அகர்வால் 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய கிறிஸ் கெயில் ஒரே ஓவரில் 24 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். அவர் 29 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
நிகோலஸ் பூரன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 28 பந்தில் 53 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 32 ஓட்டத்தை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஹுடாவும் நீஷமும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பஞ்சாப் அணி இறுதியாக விளையாடி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன் 8 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் இறுதி நிலையில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, உலகம்