ஒன்ராறியோவில் நேற்று செவ்வாய்க்கிழமை 821 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்.
அத்துடன் மாகாண அளவில் 24,000 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று நேர்மறை வீதம் 3 வீதத்துக்கு மேல் அதிகரித்து நேற்று பதிவானது.
இதேவேளை, தொற்று நோய் நேர்மறை வீதம் 2.5 -க்கு மேல் அதிகரித்த நிலையில் ரொரண்டோ, பீல் பிராந்தியம், யோர்ப் பிராந்தியம் மற்றும் ஒட்டாவாவில் இரண்டாம் நிலைக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒட்டுமொத்த மாகாணத்தின் நேர்மறை 3 வீதத்தைக் கடந்து பதிவாகியுள்ளது சிக்லானதாகக் கருதப்படுகிறது.
நேற்று அதிகளவாக ரொராண்டோவில் - 327, பீல் - 136, யோர்க் பிராந்தியத்தில் - 64 மற்றும் ஒட்டாவாவில் 79 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட்தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோவில் திங்களன்று 704, ஞாயிற்றுக்கிழமை 648 மற்றும் சனிக்கிழமை 805 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று கணிசமாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏழு நாட்களில், ஒன்ராறியோ முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 45 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
இதேவேளை, செவ்வாயன்று மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 6,237-ஐ எட்டியது. மார்ச் மாதத்தில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 3,053 இறப்புகள் பதிவாகியுள்ளன. அத்துடன் மாகாணத்தில் இதுவரை 56,606 போ் குணமடைந்துள்ளனர்.
நேற்று செவ்வாயன்று நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் மரணங்கள் எதுவும் ஏற்படவில்லை என ஒன்ராறியோ பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஒன்ராறியோவின் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா