சீனாவில் 3-ஆம் கட்ட மனிதப் பரிசோதனையில் உள்ள கோவிட்-19 தடுப்பூசி தன்னார்வலர்கள் 60 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டுப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசி போடப்பட்டவா்களுக்கு கடுமையான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என சீன அதிகாரி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சீனாவின் முக்கிய நான்கு தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் இரண்டு தடுப்பூசி ஆய்வுகள் சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 3-ஆம் கட்ட மனிதப் பரிசோதனைகளில் நுழைந்துள்ளதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அதிகாரி தியான் பாகுவோ பீஜிங்கில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.
தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பதற்கான ஆரம்ப அறிகுறிகளுடன் அனைத்து சோதனைகளும் சிறப்பாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
3-ஆம் கட்ட மனிதப் பரிசோதனையில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 60 ஆயிரம் பேரில் பலருக்கு ஊசி போடப்பட்ட இடத்தில் லேசான வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டது. அத்துடன் தடுப்பூசி போடப்பட்ட சிலருக்கு காய்ச்சல் போன்ற லேசான பக்கவிளைவுகள் தென்பட்டன. இதனைத் தவிர பாரிய மேசமான பக்கவிளைவுகள் இல்லை எனவும் டியான் குறிப்பிட்டார்.
சினோபார்முடன் இணைந்து சீன தேசிய நுண்ணுயிரில் ஆய்வுக் குழுமம் (CNBG) மற்றும் வுஹான் உயிரியல் ஆய்வு நிறுவனம் ஆகியன உருவாக்கிய இரண்டு சோதனைத் தடுப்பூசிகளின் 3-ஆம் கட்ட பரிசோதனைகள் 10 நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர் என சினோபார்ம் தலைவர் லியு ஜிங்ஜென் தெரிவித்துள்ளார்.
சீனாவின் மற்றொரு தடுப்பூசி ஆய்வாளரான சினோவாக் , பிரேசில், இந்தோனேசியா மற்றும் துருக்கியில் நிறுவனத்தின் பங்காளிகளுடன் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களுக்கு ஏற்ப மனிதப் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த மனிதப் பரிசோதனையிலும் கடுமையான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என சினோவாக் தெரிவித்துள்ளது.