கொரோனா வைரஸ் தொற்று நோயின் இரண்டாவது அலையுடன் ஒன்ராறியோ மாகாணம் போராடிவரும் நிலையில் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த கோவிட்-19 அவசர கால நிலை நவம்பர் -21 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவின் சட்டவிதிகளின் கீழ் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த அனைத்து அவசர கால உத்தரவுகளும் தொடர்ந்து நவம்பர் 21 வரை அமுலில் இருக்கும் என முற்போக்கு கன்சர்வேடிவ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 அவசர கால நிலையின் கீழ் பொதுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்துதல், வணிக நிறுவனங்களை மூடுதல் மற்றும் மருத்துவமனைகள் அல்லது மூத்தோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்று நோய்களை நிர்வகித்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் மாகாண அரசிடம் தொடர்ந்து இருக்கும்.
அவசர கால நிலை நீடிப்பு அறிவிப்பால் ரொராண்டோ, பீல் பிராந்தியம், ஒட்டாவா மற்றும் யோர்க் பிராந்தியத்தில் மாற்றியமைக்கப்பட்ட 2-ஆம் நிலைக் கட்டுப்பாடுகளில் எந்த மாற்றமும் இருக்காது.
குளிர் காலம் மற்றும் பருவ கால காய்ச்சல் ஆரம்பிக்கும் நிலையில் மாகாணத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 தொற்று நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
இந்நிலையில் ஒன்ராறியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என்று சொலிசிட்டர் ஜெனரல் சில்வியா ஜோன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு அவசர பொது சுகாதார நெருக்கடிகளையும் அணுகக் கூடிய அதிகாரம் அரசிடம் உள்ளதை உறுதிப்படுத்தவும், தொடர்ந்து முக்கியமான சேவைகளை வழங்குவதற்கும் எதுவாக அவசர நிலையை நாங்கள் நீடித்துள்ளோம்.
இந்த உத்தரவுகள் நவம்பர் 21 வரை அமுலில் இருக்கும் எனவும் சில்வியா ஜோன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா