மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
ரியாஜ் பதியுதீன் கடந்த 16 ஆம் திகதி தாக்கல் தாக்கல் செய்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்த நீதிமன்றம், அதனை நிராகரித்து உத்தரவிட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் தலைமையில் 16 ஆம் திகதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அன்றைய தினம் மன்றில் ஆஜராகாமையால் அவர்களுக்கு மறு அறிவித்தலை அனுப்புமாறு நீதிபதிகள் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டனர்.
பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் அதன் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 07 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இதேவேளை, ரியாஜ் பதியுதீன் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அமைய, அவர் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு உத்தரவிட வேண்டாம் என கோரி மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரியாஜ் பதியுதீனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விடுதலை செய்தமை சட்டவிரோத செயல் என உத்தரவிடுமாறும் இந்த இடையீட்டு மனுவில் கோரப்பட்டிருந்தது.
ரியாஜ் பதியுதீன் குறித்து பூரண விசாரணையை ஆரம்பிப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் இந்த இடையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.