முல்லைத்தீவு - மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவில் கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. இந் நிலையில் அவர்களைத் தேடி பத்தொன்பது படகுகளில் மீனவர்கள் புறப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்படையினர் போன்றோருக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையிலும் அவர்கள் இது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதேவேளை கடற்றொழில் அமைச்சரிடம் இது தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், அவரிடம் காணாமல் போன மீனவர்களைத் தேடுவதற்கு உலங்குவானூர்தி (கெலிஹாப்டர்) உதவியை கேட்டிருந்தபோதும், இதுவரையில் கடற்றொழில் அமைச்சர் தரப்பிலிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இந் நிலையில் 21.10.2020 இன்றையநாள் முல்லைத்தீவு மீனவர்கள் தாம் தொழிலுக்குச் செல்வதை நிறுத்தி, அதிகாலையில் இவ்வாறு காணாமல் போயுள்ளவர்களைத் தேடி புறப்பட்டுள்ளனர்.
மேலும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை ஆகியோர் அதிகாலையில் கடற்கரைப் பகுதிக்கு வருகைதந்து மீனவர்களிடம், நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு