பிரான்ஸில் கோவிட்-19 தொற்று நோய் எல்லை மீறி அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் 38 நிர்வாகத்துறைக்குட்பட்ட பகுதிகளுக்கு இரவு நேர ஊரடங்குச் சட்டம் விரிவுபடுத்தப்படுவதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.
நாட்டில் நேற்று 41,622 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் பதிவான சற்றுநேரத்துக்கு முன்னதாக அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் 38 பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.
இரவு 09 மணி முதல் காலை 06 வரை அமுல் செய்யப்படும் ஊடரங்குச் சட்டத்தால் சுமார் 46 மில்லியன் மக்கள் இரவு நேரங்களில் முடங்கும் சூழல் ஏற்படும்.
புதிய ஊடரங்கு விரிவாக்கல் அறிவிப்பை வெளியிட்டுக் கருத்துத் தெரிவித்த பிரதமர் காஸ்டெக்ஸ், "வரவிருக்கும் வாரங்கள் கடினமாக இருக்கும், மேலும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும்" என அஞ்சப்படுவதாகக் கூறினார்.
"தொற்று நோயைத் தடுக்கத் தவறினால் இதனை விட ஒரு மோசமான சூழ்நிலையை நாங்கள் எதிர்கொள்வோம். இதனால் நாங்கள் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.
தலைநகர் பாரிஸ், மார்சேய், லியோன், லில்லி மற்றும் துலூஸ் உள்ளிட்ட எட்டு நகரங்களுக்கு இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தின் பின்னர் ஏனைய தொற்று மையங்களில் இவ்வாறு இரவு நேர ஊடரங்கு அமுல் செய்யப்படுகிறது. புதிய உத்தரவு அடுத்த 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
எனினும் ஒரே இரவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உத்தரவு குறித்து உணவக உரிமையாளர்கள் புகார்களை தெரிவித்துள்ளனர். வசந்த காலத்தில் ஏற்பட்ட தொற்று நோயின் முதல் அலையின்போது இரண்டு மாதங்கள் நாடு முழுமையாக முடக்கப்பட்டதால் வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மற்றொரு பாதிப்பை தாங்கள் எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனைகள் நிரம்பிவரும் அபாயத்தைத் தவிர்க்க இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு