பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு கிழக்கு மாகாணத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று பேலியகொட கொத்தணியாக பரிணமித்துள்ளதை அடுத்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்டிருந்தவர்கள் இனம் காணப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்றுள்ள முடிவுகளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, கல்முனை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் இருந்தே குறித்த 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் கொரோனா பரவல் ஏற்படாதவகையில் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அருவி இணையத்துக்கு கிடைத் தகவலின் அடிப்படையில்
மட்டக்களப்பில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில்,
திருகோணமலை மீன்சந்தையில் மூன்று, தம்பலகாமத்தில் ஒருவர், உப்புவெளியில் ஒருவர், புல்மோட்டையில் ஒருவர் என ஆறு பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
திருகோணமலையில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்பிலிருந்தவர்கள் தாமாகவே வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டனர். அவர்களில் 59 பேருக்கு பீசிஆர் பரிசோதனை இடம்பெற்றிருந்தது.
ஆனால் பிற மாவட்டங்களில் பேலியகொட மீன்சந்தைக்கு சென்று திரும்பியவர்கள் தாமாக முன்வந்து ஒப்புதல் வழங்குவதில் தயக்கம் காட்டிவருவதால் மக்கள் அச்சம் வெளியிட்டுவருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை