ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கல்வி நிலையம் ஒன்றின் அருகே இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கான் அரசுக்கும் தலிபான் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே கட்டாரில் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கான ஏற்பாடுகள் நெருங்கிவரும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்துத் ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள தலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்தத் தாக்குதலுடன் தங்களுக்குத் தொடர்பில்லை என மறுத்துள்ளார்.
காவ்சர்-இ டேனிஷ் கல்வி மையத்திற்கு வெளியே தெருவில் ஒருவர் குண்டுகளைப் பொருத்தி வெடிக்க வைத்ததைக் சிலர் அவதானித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினரை மேற்கேள் காட்டி ஆப்கானிஸ்தான் உள்த்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் கூறியுள்ளார்.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த 30 பேர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் உயரக்கூடும் என ஆப்கான் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சயீத் ஜாமி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஐ.எஸ். போன்ற தீவிரவாதக் குழுக்களால் குறிவைக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினரான ஷியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் மேற்கு காபூலின் ஒரு பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது.
காபூலின் இதே பகுதியில் 2018 இல் மற்றொரு கல்வி மையம் மீதான தாக்குதலில் டசின் கணக்கான மாணவர்கள் இறந்தனர்.
கடந்த மே மாதம் ஆப்கான் வைத்தியசாலை மகப்பேற்று விடுதிக்குள் துப்பாக்கிதாரிகள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்திதில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.