பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை அவமதிக்கும் வகையில் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கருத்து வெளியிட்டதை அடுத்து துருக்கிக்கான தனது தூதரை பிரான்ஸ் திருப்பி அழைத்துள்ளது.
மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் கடும்போக்குவாத இஸ்லாத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் பிரான்ஸ் உறுதிமொழி ஏற்றுள்ளதாக மக்ரோன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களைக் வகுப்பறையில் காண்பித்துப் பாடம் நடத்திய ஆசிரியர் ஒருவர் இஸ்லாமியர் ஒருவரால் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மக்ரோன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
மக்ரோனில் இந்தக் கருத்துக்குப் பதிலளித்த துருக்கி ஜனாதிபதி எர்டோகன், தனது நாட்டில் வாழும் மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் நம்பிக்கை மற்றும் சுதந்திரத்தை புரிந்துகொள்ளாமல் கருத்து வெளியிடும் மக்ரோன் மனநலம் குறித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுடன் மக்ரோன் என்ற நபருக்குள்ள பிரச்சினை என்ன? எனவும் எர்டோகன் கேள்வி எழுப்பினார்.
எர்டோகனின் இவ்வாறான கருத்து பிரெஞ்சு அரசிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்தே துருக்கிக்கான பிரான்சின் தூதர் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். ஆலோசனைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.