திவுலுப்பிட்டிய தொற்றாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தோற்றம் பெற்ற மூன்றாவது அலை தாக்கத்தில் இலங்கை சிக்கி திணறிவருகையில் உலகளாவிய தொற்று பாதிப்பு நாடுகள் வரிசையில் 118வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நேற்றைய தினம் இலங்கையில் 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 7 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 89 பேர் இன்று குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து இதுவரை குணமடைந்தும வெளியேறியவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 803 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், சிகிச்சை பலனின்றி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா 3வது அலை தாக்கம் சடுதியான அதிகரிப்பை ஏற்படுத்தியதை அடுத்து உலகளாவிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நாடுகள் வரிசையில் இலங்கை கிடு கிடு முன்னேற்றத்தை சந்தித்துள்ளது.
இந்தவகையில் தற்போதைய நிலையில் 118வது இடத்தில் உள்ளது இலங்கை. அதேவேளை 117வது இடத்தில் உள்ள நாட்டின் தொற்று எண்ணிக்கையை விட 142 தொற்றாளர்கள் குறைவாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய கொரோனா தொற்று பாதிப்பு அளவில் 88 இலட்சத்து 27 ஆயிரத்து 932 தொற்றுகளுடன் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, அமெரிக்கா, உலகம்