"தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை பிரிட்டன் அரசு தடை செய்தது தவறு என்று பிரிட்டனில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விசேட ஆணையம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் அதைப் பிரிட்டன் அரசு நடைமுறைக்குக் கொண்டு வரும் என்று நாம் நம்பவில்லை."
- இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"வெளிநாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடைப் பட்டியலிலிருந்து நீக்கினாலும் இலங்கை அரசு ஒருபோதும் அதைச் செய்யவே மாட்டாது. நாட்டில் மீண்டும் ஒரு போரை - இரத்தக்களரியை நாம் விரும்பவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மோசமான பயங்கரவாத அமைப்பு. இதை வெளிநாடுகள் கவனத்தில்கொள்ள வேண்டும். அந்த அமைப்பை இலங்கையில் நாம் இல்லாதொழித்தாலும் குறித்த அமைப்பைச் சேர்ந்த சிலர் வெளிநாடுகளில் தஞ்சம் கோரி அரசியல் நடத்துகின்றனர். அவர்கள் தொடர்பில் வெளிநாட்டு அரசுகள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும்" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை