சிரியாவில் கிளர்ச்சிக் குழுக்களில் இறுதிக் கோட்டையாக உள்ள இட்லிப் மாகாணத்தில் ரஷ்யா நடத்திய விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் துருக்கி அரசின் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக் குழுவைச் சோ்ந்த 78 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
பயத் அல்-ஷாம் எனும் இஸ்லாமியவாத குழுவின் பயிற்சி மையம் ஒன்றும் தாக்கப்பட்டுள்ளது.
சிரியா பிராந்தியத்தில் மீண்டும் உள்நாட்டு வன்முறை தீவிரமாவதன் அறிகுறியாக இந்தத் தாக்குதல் மற்றும் படுகொலைகள் கருதப்படுகின்றன.
சிரியாவின் வடக்கு இட்லிப் மாகாணத்தில் கடந்த மார்ச் வரை உக்கிர மோதல்கள் இடம்பெற்று வந்த நிலையில் அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மேற்பார்வையில் இட்லிப் மாகாணத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது.
இந்நிலையில் ரஷ்யா நடத்திய விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலை அடுத்து அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் கேள்விக்குறியாகியுள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பிராந்தியம் இட்லிப் மாகாணமாகும். இந்தப் பகுதியை மீட்க சிரிய அரசு போராடி வருகிறது. இதில் சிரியாவுக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. கிளர்ச்சிக் குழுக்களுக்கு துருக்கி ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.