பாகிஸ்தான் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதி ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மத போதனை வகுப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர்.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலர் சிறுவர்கள் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் சிறுவர் சிறுவர்களுக்கான மத போதனை வகுப்பு இடம்பெறும் ஸ்பீன் ஜமாத் மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
"இது ஒரு தற்கொலைத் தாக்குதல் அல்ல. அங்கே ஒரு பையில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவையே வெடித்துள்ளன " என பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறினார்.
இதேவேளை, காயமடைந்தவர்கள் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.