கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கவுதாரிமுனை தரைப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்ததால் நாற்பது ஏக்கருக்கும் அதிகமான நெற் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக பூநகரி பிரதேச செயலர் எஸ்.கிருஷ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று பகல் திடீரென கடல் நீர் கரையினுள் புகுந்துள்ளது.
அந்தப் பகுதியில் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடல் நீர் புகுந்தமையால் 40 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் நெற் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
திடீர் என ஏற்பட்ட குறித்த அசம்பாவிதம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களும் அங்கு வந்து பார்வையிட்டதாக பிரதேச செயலர் அருவியின் பிராந்திய செய்தியாளருக்கு தெரிவித்தார்.
குறித்த திடீர் இயற்கை மாறுதலால் அந்தப் பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை இயற்கையாக வேறு பகுதிகளில் அனர்த்தம் ஏற்பட்டால் அதன் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளபோதிலும் அவ்வாறான அனர்த்தம் எதுவும் நடைபெற்றதாக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்று கிளிநொச்சி அனர்த்தமுகாமைத்துவப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி