அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பம்பியோ 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தனது இலங்கைப் பயணத்தின்போது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை பம்பியோ சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்தச் பேச்சின்போது இலங்கையில் சீனாவின் தலையீடுகள் குறித்தத அமெரிக்காவின் கவலைகளை எழுப்புவதோடு, மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பம்பியோ விவாதிப்பார் என பம்பியோவின் துணை உதவி செயலாளர் ஆர். தோம்சன் முன்னர் கருத்து வெளியிட்டிருந்தார்.
அத்துடன் அமெரிக்கா இலங்கை இடையிலான இரு தரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாகவும் தோம்சன் மேலும் கூறினார்.
இதேவேளை, பம்பியோவின் இலங்கை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஜே.வி.பி. இன்று போராட்டம் நடத்தியது.
இலங்கையின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையில் தலையிட அமெரிக்க அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாக ஜே.வி.பி. வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்காவின் மிக உயர்மட்ட பிரமுகர் பம்பியோ என்பதும் குறிப்பிடத்தக்கது.