இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு நிறுத்தப்படாவிடில் நடுக்கடலில் சண்டை மூளுமென எச்சரித்திருந்தேன் என்று கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலின்போது அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் அத்துமீறி எமது கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபடுகின்றார்களா என்பது தொடர்பில் ஒவ்வொரு நாளும் அறிக்கை தர வேண்டும் என அதிகாரிகளை இதன்போது அமைச்சர் பணித்தார். எத்தனை மணிக்கு வந்து எத்தனை மணிக்கு செல்கின்றார்கள் என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நேற்றைய தினம் இந்திய தொலைக்காட்சி ஒன்றில் செய்தி ஒன்றினை தொடர்ச்சியாக ஒளிபரப்பியிருந்தனர். பி212 என்ற போட்டில் இருந்தவாறு கல்லினாலும், போத்தல்களாலும் எறிந்து துரத்துவதாகவும், அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதென்றும் நேற்றைய தினம் குறித்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வந்தார்கள். அப்பொழுது நான் தற்போதுதான் சந்தோசமான செய்தி கிடைத்திருப்பதாக சம்மந்தப்பட்டவர்களிடம் சொன்னேன்.
நான் ஏற்கனவே இந்திய தரப்பு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இங்குள்ள கடற்படை தளபதி ஆகியோருக்கு இதனை நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும், அல்லதுவிட்டால் கடலில் சண்டை தொடங்கும் என்று குறிப்பிட்டிருந்தேன். கடல் சண்டை என்பது இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்குமல்ல. இலங்கை கடற்தொழிலாளர்களுக்கும், இந்திய கடற் தொழிலாளர்களிற்கும் இடையில் கடலில் சண்டை தொடங்கும் ஆனபடியினால் அதனை உடன் நிறுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கின்றேன்.
இப்போது இரகசியமாக நடந்துகொண்டிருக்கின்றது என்பது வேறு. தற்போது 4 நாட்களாக இந்திய படகுகள் பருத்திதுறை பகுதியில் வரவில்லை என்றதான ஒரு கதை உள்ளது. அது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை. அனைத்து கடல் தொழில் சார்ந்த அதிகாரிகளும் உங்கள் கடற்பரப்பிற்குள் இந்திய எல்லை தாண்டி வரும் கடற் தொழிலாளர்களுடைய வருகை தொடர்பில் தினமும் கண்காணித்து தகவல் தருமாறும் அவர் இதன்போது தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம், தமிழ்நாடு, கிளிநொச்சி