நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒரே நாளில் மூன்று இடங்கள் முன்னேறி 114வது இடத்தில் உள்ளது இலங்கை.
உலகளாவிய கொரோனா தொற்று பாதிப்பு அடிப்படையிலான தரவரிசையில் 117வது இடத்தில் இருந்து இலங்கை நேற்று ஒரே நாளில் 457 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதை அடுத்து மூன்று இடங்கள் முன்னேறி 114வது இடத்தில் உள்ளது.
நேற்றைய தினம் 457 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்களுள் 447 பேர் பேலியகொட மற்றும் மினுவங்கொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். இவர்கள் தவிர தனிமைப்படுத்தலில் இருந்த 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதன் மூலம் மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 679 ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்று உறுதியானவர்களில் இன்று 32 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து இதுவரை குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 75 ஆக உயர்வடைந்துள்ளது.
இதையடுத்து கொரோனா தொற்று உறுதியான நிலையில் இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 776 ஆக உள்ளதுடன், நேற்று மட்டும் அடுத்தடுத்து மூவர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 113 மற்றும் 112 ஆம் இடங்களில் உள்ள நாடுகளின் தொற்று எண்ணிக்கைக்கும் இலங்கையின் தற்போதைய தொற்று நிலைக்கும் இடையே முறையே, 67 மற்றும் 170 தொற்றார்களது எண்ணிக்கையே வித்தியாசமாக காணப்படுகிறது.
இதனால் இன்று தொற்று உறுதியாகும் எண்ணிக்கையை பொறுத்து இந்நிலையில் மாற்றம் ஏற்படும் நிலையுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை