வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுவருபவர்களிடையே ஏற்பட்ட தொற்றுடன் தொடர்புபட்டு மேலும் ஒருவருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி வீதி பணியில் ஈடுபட்டு வரும் மகா நிறுவனத்தின் கீழ் பணியாற்றிவரும் மூவருக்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து குறித்த பணியிடத்துடன் தொடர்புபட்டிருந்த அனைவரும் இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
குறித்த பணிக்குழாமில் இணைந்து பணியாற்றி வந்த யாழ்மாவட்டம் சாவகச்சேரி, வல்வெட்டித்துறை மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களைச் சேர்ந்த மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த பணிக்குழாமுடன் தொடர்புபட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ள 56 பேருக்கு கடந்த சனிக்கிழமையும், 137 பேரிடம் ஞாயிற்றுக் கிழமையும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகுதியினரது முடிவு இன்று (ஒக்-28) வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனுராதபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, தென்மராட்சி, வல்வெட்டித்துறை, வவுனியா