கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமடைந்துவரும் பிரான்ஸை தொடந்து மற்றொரு ஐரோப்பிய நாடான ஜேர்மனியிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் - 02 –ஆம் திகதி முதல் நாடு தழுவிய சமூக முடக்கல் அமுலாகுமென சாஞ்சலர் அங்கேலா மேர்க்கெல் புதன்கிழமை அறிவித்தார்.
எனினும் தொற்று நோயின் முதல் அலையின்போது அமுலாக்கப்பட்டது போன்றல்லாது இந்தப் பொது முடக்கம் எளிமையாக்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் அதிக தொடர்புகளைக் முடிந்தவரைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அங்கேலா மேர்க்கெல் கூறினார்.
பொது முடக்கம் அறிவிக்கப்பட்டாலும் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு மையங்கள் திறந்திருக்கும் எனவும் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அங்கேலா மேர்க்கெல் தெரிவித்தார்.
எனினும் கடுமையான தேசிய சுகாதார அவசரநிலையைத் தவிர்க்கும் வகையில் நாங்கள் செயற்பட வேண்டும். தற்போதுள்ள விகிதத்தில் தொற்று நோயாளர் எண்ணிக்கை அதிகரித்தால் எங்கள் சுகாதார சேவை முடக்கிவிடக்கூடும் எனவும் அவா் எச்சரித்தார்.
100,000 பேருக்கு 50 என்ற அடிப்படையில் நாட்டின் புதிய தொற்று நோயாளர் தொகை கடந்த ஒரு வாரத்தில் பரவியதை அடுத்தே சமூக முடக்கல் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசும் நாட்டின் 16 மாநில முதல்வர்களும் இணைந்து சினிமா தியேட்டர்கள், வர்த்தக கண்காட்சிகள், உணவகங்கள், பப்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றை நவம்பர் முழுவதும் மூட முடிவு செய்துள்ளனர்.
தேசிய அளவிலான கால்ப்பந்துப் போட்டிகள் உள்ளிட்ட தேசிய விளையாட்டுக்கள் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படலாம். ஏனைய விளையாட்டு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது.
நாட்டில் எந்தப் பகுதியிலும் ஒரே நேரத்தில் பத்து பேருக்கு மேல் கூடக்கூடாது எனவும் மேர்க்கெல் கூறினார்.
அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனைய பயணங்களை முற்றாகத் தவிர்க்குமாறு அரசு மக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும் வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்கள் அந்த முறைமையைப் பின்பற்றுமாறும் கோரப்பட்டுள்ளது.
மூத்தோர் இல்லங்களில் வசிப்பவர்களை சந்திக்க கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும். அத்துடன் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்களை கடும் சுகாதார விதிமுறைகளுடன் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொற்றுநோயால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 பில்லியன் டொலர் வரையான மேலதிக நிதி உதவியையும் ஜோ்மனி அரசு அறிவித்துள்ளது.