மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் எண்ணிக்கை உடனடியாகக் குறையும் சாத்தியம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இன்னும் காலம் எடுக்கும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அடுத்த சில வாரங்களுக்கு ஏற்ற-இறக்கங்களுடன் இருக்கும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
கம்பஹாவின் நிலைமை ஒரளவு முன்னேற்றமடைந்துள்ளது. இதன் விளைவாக மினுவாங்கொடை கொத்தணித் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் டாக்டர் ஹேமந்த ஹேரத் நம்பிக்கை வெளியிட்டார்.
தொற்று நோயை நாடு முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் உள்ள கூட்டுப் பொறுப்பை உணர்ந்து நாட்டு மக்கள் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.