யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கலந்துகொண்ட அந்தியேட்டி நிகழ்வில் பங்குகொண்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பேலியகொட மீன் சந்தைக்கு சென்று திரும்பியவர்களில் மூவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அவர்களில் பொலிகண்டியைச் சேர்ந்த நபர், பலாலி வடக்கு , ஜே/254 அன்ரனி புரத்தில் கடந்த மாதம் நடைபெற்றிருந்த சாவு வீடு ஒன்றில் கலந்துகொண்டிருந்தார் என்றும் அதன் பின்னர் மீண்டும் கடந்த 24ஆம் திகதி அங்கு நடைபெற்ற அந்தியேட்டி நிகழ்வில் பங்கேற்று விட்டு 26ஆம் திகதியே பொலிகண்டிக்கு திரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் சென்று வந்த அந்தியேட்டி நிகழ்வில் பங்குகொண்ட நபர்கள் மற்றும் அவர் தங்கியிருந்த வீட்டாரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதேபோல பொலிகண்டியிலும் அவருடைய வீட்டுச் சூழலில் உள்ள நான்கு வீடுகள் வரையில் தனிமைப்படுத்தப்படக்கூடும் என்று கருதப்படுகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்