பிரான்ஸ் - நைஸ் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் இன்று புகுந்த தீவிரவாத சந்தேக நபர் ஒரு பெண்ணை கழுத்தறுக்குக் கொலை செய்ததுடன், மேலும் இருவரையும் வெட்டியும் குத்தியும் கொடூரமாகக் கொன்றுள்ளார். மேலும் பலர் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
தேவாலயத்தில் இன்று வழிபாடு இடம்பெற்றுக்கொண்டிருந்த போதுகத்தியுடன் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். அங்கிருந்த பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டர்.
இதுபற்றி தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் குற்றவாளியை கைது செய்தனர்.
இதேவேளை, இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற சில மணி நேரங்களில் தெற்கு பிரான்சின் அவிக்னோன் நகரின் மாண்ட்பேவட் பகுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வலம் வந்துள்ளார். அப்பகுதி மக்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அந்த நபர் “அல்லாஹ் அக்பர்” என்றும் கோசமிட்டுள்ளாதாகக் கூறப்படுகிறது.
இவரைப் பிடிக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்ட போது தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது அவரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.
அண்மையில் நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரத்தைக் காண்பித்து பாடம் நடத்திய ஆசிரியர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு பிரெஞ்சு ஜனாதிபதி கடும் கண்டனம் வெளியிட்டார். மதசாா்பற்ற கொள்ளைகளை தீவிரமாகப் பின்பற்றும் பிரான்ஸில் இஸ்லாதிய அடிப்படைவாதத்துக்கு இடமில்லை என அவா் தெரிவித்தார்.
இதன் பின்னணியில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
தேவாலயத்தில் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து பிரான்ஸ் தனது தேசிய பாதுகாப்பு எச்சரிக்கை முறையை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.
இதேவேளை, நைஸில் இன்று நடத்த கொடூர படுகொலைகளுக்கான நோக்கம் என்ன? என்பது குறித்து பொலிஸார் உடனடியாக எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை.
படுகொலை இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதுவொரு தீவிரவாதச் செயல் எனக் கடும் கண்டனம் தெரிவித்தார். வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவா் கூறினார்.