வெளிநாடுகளைச் சேர்ந்த பாரிய உல்லாசப் பயணக் கப்பல்கள் கனடாவுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறைந்தபட்சம் எதிர்வரும் பெப்ரவரி இறுதி வரை நீடிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்துள்ளார்.
ஆர்க்டிக் கடல் நீரேரிக்குள் 12 அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் சிறிய கப்பல்களுக்கும் பெப்ரவரி இறுதி வரையான இந்தத் தடை பொருந்தும் எனவும் கார்னியோ தெரிவித்துள்ளார்.
தொற்று நோய் பரவலின் ஆரம்ப காலகட்டங்களில் தொற்று நோய் பரவல் முக்கிய காரணிகளில் ஒன்றாக பாரிய உல்லாசப் பயண சொகுசுக் கப்பல்கள் காணப்பட்டன. இவ்வாறு பாரிய கப்பல்களில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான பயணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகினர். இதனால் தரிக்க அனுமதியின்றி பல கப்பல்கள் கடலில் சிக்கித் தவித்தன.
கடந்த மார்ச் நடுப்பகுதியில் 500-க்கு மேற்பட்ட பயணிகளை உள்ளடக்கிய கப்பல்கள் நாட்டு்க்குள் நுழைய கனடா தடை விதித்தது.
பின்னர் ஒக்டோபர் இறுதி வரை இந்தத் தடை நீடிக்கப்பட்டது. மே மாதம் முதல் 100 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்யும் கப்பல்களுக்கான தடை அமுல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.