பிரான்ஸின் நீஸ் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் புகுந்து மூவரைக் கொடூரமாக வெட்டிக் கொன்ற தீவிரவாதி இரு தினங்களுக்கு முன் துனிஷியாவிலிருந்து வந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை அடுத்து பொலிஸாரால் சுடப்பட்ட அந்த நபர் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.
இந்நிலையில் இது ஒரு இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தால் பள்ளிகள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை மூவாயிரத்திலிருந்து ஏழாயிரமாக அதிகரிப்படுவதாக மக்ரோன் கூறினார்.
அத்துடன் நாட்டின் பாதுகாப்பு எச்சரிக்கை உயர் மட்டத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் பாரிஸ் நகரின் வட மேற்கு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகே ஆசிரியர் ஒருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டார்.
முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களைத் தனது மாணவர்களிடத்தில் காட்டியதாக கூறப்படும் சாமூவேல் என்ற ஆசிரியர் இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் தொடர்பான கடுமையான கண்டனங்களை மக்ரோன் வெளியிட்டார். கேலிச் சித்திரங்களை பிரசுரிப்பது நாட்டின் உரிமை என அவர் தெரிவித்தார். தீவிர இஸ்லாமியவாதத்தை ஒடுக்கும் அரசின் முயற்சிகள் தொடரும் எனவும் அவா் கூறினார்.
மக்ரோனின் இந்தக் கருத்துக்களுக்கு இஸ்லாமிய நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. அத்துடன் பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பின்னணியிலேயே தேவாலய கொடூர படுகொலைகள் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதேவேளை, நீஸ் நகரில் படுகொலை இடம்பெற்ற இடத்தை நேற்று பார்வையிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், "எங்களுடைய விழுமியங்களுக்காகதான் நாங்கள் மீண்டும் தாக்கப்பட்டிருக்கிறோம். எந்த பயங்கரவாதத்திற்கும் அடிபணியாத, சுதந்திரமாக நம்பிக்கையை தேர்வு செய்துகொள்ள இங்குள்ள உரிமைதான் அந்த விழுமியம்." எனத் தெரிவித்தார்.
மேலும் "நான் இன்று மீண்டும் ஒருமுறை மிகுந்த தெளிவுடன் சொல்கிறேன்; நாங்கள் எதனையும் விட்டு கொடுக்க மாட்டோம்," எனவும் அவர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.