ஐபிஎல்2020 ரீ-20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியின் அடுத்த சுற்று கனவை கலைத்து சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல்-2020 தொடரின் 49வது லீக் போட்டி நேற்று டுபாயில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி தலைவர் டோனி கொல்கத்தா அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை வழங்கினார்.
அதற்கமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்றிருந்தது.
173 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சென்னை அணியின் வெற்றியை தடுப்பதன் மூலம் தமது அடுத்த சுற்று வாய்பை உறுதி செய்யும் முனைப்பில் செயற்பட்ட கொல்கத்தா அணிக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
போட்டியின் இறுதிப் பந்துவரை விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணியில் அதிகபட்சமாக கெயிக்வாட் 72 ஓட்டங்களையும், ராயுடு 38 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தனர். இறுதிப் பந்தில் ஆறு ஓட்டத்தை விளாசி வெற்றிக்கு காரணமாக இருந்த ஜடேஜா 31 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காது இருந்தார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக கெயிக்வாட் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பினை இழந்த நிலையில் விளையாடிய சென்னை அணி பெற்ற வெற்றியானது கொல்கத்தா அணியின் அடுத்த சுற்று வாய்ப்பை ஒரேயடியாக இல்லாமல் செய்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, உலகம், தமிழ்நாடு, சென்னை