பஞ்சாப் அணியின் சார்பில் விளையாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டத்ததை வீணாக்கும் வகையில் ராஜஸ்தான் அணி வெற்றிவாகை சூடியுள்ளது.
ஐபிஎல்-2020 ரீ-20 கிரிக்கெட் தொடரின் 50வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது.
நேற்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை வழங்கியது.
அதற்கமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களை பெற்றிருந்தது.
பஞ்சாப் அணியின் சார்பில் கிறிஸ் கெய்ல் 46 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு ஆறு 4 ஓட்டங்கள், எட்டு 6 ஓட்டங்கள் அடங்கலாக 99 ஓட்டங்ளை பெற்று ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் ஒரு ஓட்டத்தில் சதத்தை தவறவிட்டு 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார் கிறிஸ் கெய்ல்.
இதேவேளை நேற்றைய ஆட்டத்தில் எட்டு 6 ஓட்டங்களை விளாசியதன் மூலம் ரீ-20 போட்டிகளில் ஆயிரம் ஆறு ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் கிறிஸ் கெய்ல் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
186 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணிக்கு உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆரம்ப இணை அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தது.
அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் ஆறு 4 ஓட்டங்கள், மூன்று 6 ஓட்டங்களுடன் 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார். உத்தப்பா 30 ஓட்டங்களுடனும், சாம்சன் 25 பந்துகளில் நான்கு 4 ஓட்டங்களையும், மூன்று 6 ஓட்டங்களையும் அடித்து 48 ஓட்டங்களை பெற்றும் ஆட்டமிழந்திருந்தனர்.
தொடர்ந்து ஆடிய ஸ்மித்தும் பட்லரும் பொறுப்புடன் விளையாடி வெற்றி இலக்கை எட்ட உதவினர். இறுதியில் 17.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 186 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி.
போட்டியின் ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, உலகம்