திருகோணமலை நகரப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவரது வழித்தடத்தில் தொடர்புடைய வகையில் ஊடகவியலாளர் ஒருவர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு கொரோனா தொற்று உறுதியானவர்களில் ஒருவர், திருகோணமலை நகர், தபால்கந்தோர் வீதியில் உள்ள ஜிம்மிற்கு சென்று வந்திருந்தமை அறியப்பட்டிருந்தது.
இதையடுத்து குறித்த ஜிம்மிற்கு அண்மைய நாட்களில் சென்றவர்கள் விபரங்கள் திரட்டப்பட்டு அவரவர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஜிம்முடன் தொடர்புபட்டே குறித்த ஊடகவியலாளர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அருவி இணைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் ஊடகவியலாளரது சகோதரனும் தொற்று உறுதியானவர் சென்ற ஜிம்மிற்கு சென்று வருபவர் என்பதை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஊடகவியலாளருடைய சகோதரனுக்கு மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட பிசிஆர் பரிசோதனை முடிவில் கொரோனா நெக்கடிவ் என வந்திருப்பதாகவும் இருந்தும் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்ய பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அருவி செய்தியாளர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை