இலங்கையில் கொரோனாவின் பிடி இறுக்கமடைந்து வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்வரை கிளிநொச்சி மாவட்டம் தவிர்ந்த 24 மாவட்டங்களில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கும் தொற்று உறுதியானதை அடுத்து இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவல் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் (நவ-2) புதிதாக 275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதவிர ஏனைய 232 பேரும் சமூகத்தில் இருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புகளை பேணிய நிலையில் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 344 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதையடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 249 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கிடையே இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் உள்ளவர்களது எண்ணிக்கை 6 ஆயிரத்து 65 ஆக மாற்றமடைந்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய கொரோனா தொற்று உறுதியான நாடுகள் தரவரிசையில் 11 ஆயிரத்து 335 தொற்றுகளுடன் இலங்கை தற்போது 109வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை