திருகோணமலை மாவட்டத்தில் தற்போது நாட்டில் நிலவும் கொவிட் 19 அசாதாராண நிலையை கருத்திற்கொண்டு முன்னோக்கும் காலத்திற்கு மக்களுக்கு அவசியமான உணவுப்பொருட்கள் மற்றும் மக்களுக்கான சேவைகளை வழங்குவது தொடர்பான விசேட கூட்டம்(4) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துகோராள கலந்துகொண்டதுடன், அரசாங்கம் இவ்வைரசை முற்றாக ஒழிக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாகவும் குறிப்பாக பொதுமக்கள் உட்பட அனைவரும் சுகாதாரத்துறையினரால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்று இதன்போது தெரிவித்தார்.
மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைநிலை பாதிக்கப்படாத வண்ணம் தொழில் துறை முயற்சிகளில் ஈடுபடுகின்றவர்கள் உட்பட துறைசார் செயற்பாடுகளை மேற்கொள்கின்றவர்கள் தற்போது நிலவும் அவதான நிலையை கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளை பேணி அத்துறைசார் செயற்பாடுகளை மேற்கொள்ளல் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க முடியும்.
அத்துடன் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் உள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள உலர் உணவுப்பொருட்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
மாவட்டத்தில் உள்ள மக்களின் நுகர்வுக்கு அவசியமான பொருட்களின் இருப்பு மற்றும் வழங்கப்படும் சேவைகளை குறைவின்றி மேற்கொள்வதன் முக்கியத்துவத்தினை அரசாங்க அதிபர் இதன்போது எடுத்துரைத்ததுடன் அத்தியாவசியப்பொருள் விநியோகம் தொடர்பான விடயங்களை உரிய துறைசார் அதிகாரிகளுடன் கேட்டறிந்து கொண்டார்.
ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது எமது மாவட்டத்தில் இரண்டாம் கொவிட் அலையில் 13 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். மக்கள் அவதானத்துடன் செயற்படல் முக்கியமானது.
அதேபோன்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாவண்ணம் உரியசெயற்பாடுகளை சுகாதார நியமங்களை பின்பற்றி மேற்கொள்ளல் வேண்டும். மாவட்டத்திற்குள் உட்புகும் 04 பிரதான பாதைகளில் வழித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அநாவசியமான பயணங்களை தவிர்த்தல் இன்றியமையாயதது. அனைவரும் பொறுப்புடன் செயற்ப்படல் மூலம் இவ்வைரசிலிருந்து பாதுகாப்பு பெறமுடியும் என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும் அவசியமான பொருட்களை உரிய இடங்களில் இருந்து மாவட்டத்திற்கு கொண்டுவரல் மற்றும் மாவட்டத்தின் தேவைக்கதிகமான பொருட்களை ஏனைய பிரதேசங்களுக்கு அனுப்புவதற்கான பொறிமுறை போன்ற விடயங்கள் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி)எம்.ஏ.அனஸ், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன் , கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் எம்.சி.எம்.ஷெரீப், துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை