மன்னார் நகரில் உள்ள சில பல்பொருள் விற்பனை நிலையங்களில் மஞ்சள் தூள் மறைத்து வைத்து நாளுக்கு நாள் அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், விலை தொடர்பாக உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது மன்னார் நகரில் உள்ள சில பல்பொருள் விற்பனை நிலையங்களில் மஞ்சள் தூள் 100 கிராம் 400 ரூபாய் குதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதற்கு அமைவாக 1 கிலோ மஞ்சள் தூள் 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
நாளுக்கு நாள் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
-எனவே மன்னாரில் மஞ்சள் தூளின் விலை கட்டுப்பாடு இன்றி காணப்படுகின்றது.
எனவே உரிய அதிகாரிகள் குறித்த விடையத்தில் கூடிய கவனம் செலுத்தி கட்டுப்பாட்டு விலையுடன் விற்பனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே வேளை இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக மன்னார் ஊடாக கடத்தி வரப்படுகின்ற மஞ்சள் கட்டிகள் மன்னாரில் உள்ள வர்த்தகர்கள் சிலருக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை குறைந்த விலைக்கு பெற்று மஞ்சள் கட்டியினை மஞ்சள் தூளாக்கி அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்