அமெரிக்காவில் மற்றொரு உயர்மட்ட அதிகரிப்பாக நேற்று புதன்கிழமை 1 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
நேற்று 140,543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்கிழமை அமெரிக்காவில் ஒரு நாளில் அதிகளவாக 2 இலட்சத்துக்கு மேற்பட்ட தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு தொடர்ந்து தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகிறது.
சில மாகாணங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள வெள்ளை மாளிகை பணிக்குழு, இந்தப் பகுதிகளில் சோதனைகளை அதிகரிக்குமாறும் பரிந்துரைத்துள்ளது.
தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வருகின்றன.
நேற்று புதன்கிழமை நிலவரப்படி அமெரிக்கா முழுவதும் தொற்றுக்குள்ளாகித் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட 65,368 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை இந்த எண்ணிக்கை 61,964 ஆக இருந்தது.
அத்துடன் ஒரு மாதத்துக்கு முன்பு இருந்ததை விட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது இரு மடங்காகியுள்ளது.
தொற்று நோயாளர்களின் அதீத அதிகரிப்பால் அமெரிக்காவில் பல வைத்தியசாலைகள் தங்கள் செயற்பாட்டுத் திறனை இழந்துள்ளன. மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவைப் பணியாளர்கள் அதிக வேலைப் பளு காரணமாக சோர்வடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் 65 மாவட்டங்கள் கோவிட் -19 மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த மாவட்டங்களில் பெரும்பாலும் 90% படுக்கைகள் நிரம்பியுள்ளன என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போதைய சூழலை சுகாதார அவசர நிலையாகக் கருதி சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பொதுமக்கள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா