பிரான்ஸில் தற்போது பதிவாகும் நான்கு மரணங்களில் ஒன்று கொரோனாவுடன் தொடர்புடையதாக உள்ளதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மிகவும் வீரியமான இரண்டாவது கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரத்தில் தினசரி 400 முதல் 500 கொரோனா மரணங்கள் பிரான்ஸில் பதிவாகின.
இதேவேளை, தற்போதைய நிலையில் கட்டுப்பாடுகளை மேலும் உயர்த்துவதும் உள்ள கட்டப்பாடுகளைப் குறைப்பதும் பொறுப்பற்ற செயலாக அமையும் என செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறினார்.
குறைந்தபட்சம் அடுத்த 15 நாட்களுக்கு தற்போது அமுலில் உள்ள விதிகளில் எந்த மாற்றங்களும் செய்யப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஒரு வாரமாக தொற்று நோயாளர் தொகையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தப் போக்கு தொடர்ந்தால் இரண்டாவது அலையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும். இதன்மூலம் டிசம்பர் முதலாம் திகதி முதல் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியும் எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மருத்துவமனைகள் மீதான சுமை அதிகரித்துள்ளது. தற்போது 4,803 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளனர் எனவும் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் குறிப்பிட்டார்.